
சிலருக்கு சிலது.
(நெடுங்கதை)
-இந்துமகேஷ்
ஒருமடமாதும் ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வுகலங்கி ஒழுகிய விந்து
ஊறுசுரோணித மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறுதுளிமாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர்வளர்மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்துமடந்தை
உதரமகன்று புவியில்விழுந்து
யோகமும் வாரமும் நாளும்அறிந்து-
மகளிர்கள் சேனை தர அணை ஆடை
மண்பட உந்தி யுதைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர்அறிவு ஈர்அறிவு ஆகி வளர்ந்து
ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியி லிருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடை மணியாடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதியளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே......
உயர் தரு ஞான குருவுபதேச
முந்தமிழின் கலையும் கரைகண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடிகோதி அறுபதநீல
வண்டுஇமிர் தண்தொடை
கொண்டை புனைந்து
மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க
மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழிகொண்டு சுழிவெறிந்து
மாமயில் போல் அவர்போவது கண்டு
மனது பொறாமல் அவர்பிறகோடி
மங்கல செங்கலசந் திகழ் கொங்கை
மருவ மயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேரவழங்கி....
......................................
(பட்டினத்தார் பாடல்)
வீடு-1
இரவு மணி பதினொன்றரை.
இன்னும் தூங்கவில்லை!
படுக்கையில் உட்கார்ந்துகொண்டே கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள் புவனா.
அவன் வரும்வரைக்கும் எப்படியாவது பொழுதை விரட்டியாகவேண்டும்.
அவன்...?
அவளது கணவன்!
அவன் எப்போது வருவான் எப்படி வருவான் என்று தீர்மானிக்க முடியாதபடி இப்போது கொஞ்ச நாட்களாக அவனது போக்கு முற்று முழுதாய் மாறி விட்டிருந்தது.
"எங்கை போயிருந்தனீங்கள் இவ்வளவு நேரமும்?"
"சும்மா...வெளியிலை பெடியளோடை புட்போல் அடிச்சிட்டு வாறன்!"
"நான் ஒருத்தி இங்கை தனிய இருக்கிறன் எண்ட நினைப்பு வரேல்லையா உங்களுக்கு?"
"நல்லகதை... உன்ரை நினைப்பு இல்லாமல் உயிர்வாழ முடியுமா நான்? ....என்ரை முகத்தை ஒரேயடியாப் பார்த்துக்கொண்டிருந்தா உனக்குப் போரடிக்கும்... அதுதான்!"
"நல்லாக் கதைப்பியள்!"
அவள் ஒரு செல்லச்சிணுங்கலுடன் முகத்தைத் திருப்பிக்கொள்வாள்.
அவளுக்குப் பின்புறமாய் வளைந்து அவளது முதுகில் ஊர்ந்து இடக்கையால் அவளது இடையை வளைத்து வலக்கையில் அவளது முகத்தை ஏந்தி அவளது கழுத்தில் அவன் தனது உதடுகளை அழுத்தமாய்ப் பதிக்கும்போது அவனிடமிருந்து விலகியோட அவளால் முடிவதில்லை.
இதெல்லாம் கல்யாணமாகி ஒரு வருடம் வரைக்கும்தான்.
ஆனால்...இப்போது...?
அவளைப் பரிசோதித்த டொக்டர்கள் எல்லாம் உறுதிப்படுத்தியாகிவிட்டது.
அவள் தாய்மையடைய வாய்ப்பேதுமில்லை.
அதிர்ச்சி இருவருக்கும்தான். ஆனால் வெளியே சொல்லிக்கொள்ள முடியாத சோகம்.
அதுவும் வெளிநாட்டில்....!
என்னதான் உயிரைக்கொடுத்துப் பழகினாலும் நாங்கள் அன்னியர் அன்னியர்தான் என்று இந்த நாட்டுக்காரனை விட சொந்த நாட்டுக்காரனே தூரவிலகிநிற்கிற சொந்தங்கள்தான் இங்கே!
சும்மா மெல்கிற வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா இருக்குமா?
காதும் காதும் வைத்தாற்போல் கதைக்க தொலைபேசிகள் வேறு.
"ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதை... இவள் புவனராணிக்கு இனிப் புள்ளையே பிறக்காதாம்...டொக்டர்மார் சொல்லிப்போட்டினமாம்!...."
"மெய்யே...அவளைப்பற்றி நான் முன்னமே கேள்விப்பட்டனான்...ஊரிலை இந்தியன் ஆமி வந்திருக்கேக்கை அவளைக் கெடுத்ததாம்... வயித்திலை இருந்த பிள்ளையைக் கரைச்சுப்போட்டுத்தானாம் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பினவை.."
"பாவம் பரஞ்சோதி....விசயம்தெரியாமல் அவளைக் கட்டிற்றான்...இப்ப...?"
"பழிபாவம் சும்மாவிடுமே...புருசன்மாரை ஏமாத்திற பெண்சாதிமாரும் பெண்சாதிமாரை ஏமாத்திற புருசன்மாரும் ஒருக்காலும் நல்லா இருக்காதுகள்..."
-எல்லாவற்றையும் அருகிருந்து பார்த்தாற்போல் நேர்முகவர்ணனையாய் வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்படும்.. கண்காது மூக்கு வைத்துக் கற்பனைகள் இரகசியமாக ஊருக்குள் உலாவரும்.
இவைகள் எதுவும் புவனராணிக்கோ பரஞ்சோதிக்கோ இன்னும் எட்டவில்லை.
நேரில் சந்திக்கும்போதெல்லாம் நிறைந்த அன்பை வார்த்தைகளில் பரிமாறிக் கொடுத்துவிட்டு முதுகுக்குப் பின்னால் முகத்தைச் சுளித்துக்கொண்டுபோகிற மனிதர்களின் முகமூடிகள் புவனராணிக்குத் தெரியாது.வெளுத்ததெல்லாம் பால் என்று இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிற குழந்தை உள்ளத்தின் சொந்தக்காரியாகவே அவள் இருந்தாள்.
வெளிக்கதவு திறந்து தாழிடப்படும் சத்தம்கேட்டது.
வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை பிரித்தபடியே படுக்கையில் குப்புறப் போட்டுவிட்டு மெதுவாக எழுந்தாள் புவனராணி.
முன்னறைக்கு அவள் வந்தபோது பரஞ்சோதி குளியலறைக்குப் போயிருந்தான்.
போனவேகத்திலேயே தலையையும் முகத்தையும் தண்ணீரில் நனைத்துக் கொண்டு திரும்பியவன் "துவாயை எடு!" என்றான்.
அவள் எடுத்துக்கொடுத்தாள்.
முகத்தைத் துடைத்துக்கொண்டே அவன் கேட்டான்.
"ஏன் இன்னும் முளிச்சுக்கொண்டிருக்கிறை...மணி பன்ரெண்டாச்சுதெல்ல...!"
இந்தக்கேள்வி அவளுக்குப் புதிதாக இருந்தது.
இதுவரைக்கும் அவன் எங்கேபோனான் என்ன செய்தான் என்ற கேள்வி அவள் வாயிலிருந்து வருவதற்குள் முந்திக்கொள்ள முயல்கிறானா?
அவள் கேள்வி எழுப்பவில்லை.
"நித்திரை வரேல்லை!" என்றுமட்டுமே சொல்ல முடிந்தது அவளால்.
"சாப்பிட வாங்கோவன்!"என்று அவள் அழைத்தபோது அவன் திருப்பிக் கேட்டான்-
"இன்னும் சாப்பிடவில்லையா நீ?"
"நீங்கள் வராமல்...."
"இந்தாப்பார்..இது யாழ்ப்பாணமில்லை...அங்கைகூட இப்ப ஒருத்தருக்காக ஒருத்தர் காத்துக் கொண்டிருக்கிறதில்லை....புருசன் சாப்பிட்டபிறகுதான் பெண்சாதி சாப்பிடவேணுமெண்டு அவசியமுமில்லை...அப்பிடி நான் உன்னட்டை ஒருக்காலும் சொன்னதுமில்லை... பசிக்கிறநேரம் சாப்பிட்டு நித்திரைவாற நேரம் கொண்டிரவேண்டியதுதான்...புருசன் பெண்சாதியெண்டாலும் சேர்ந்துதான் சாப்பிடவேணும் சேர்ந்துதான் படுக்கவேணும் எண்டு எந்தக் கட்டுப்பாடும் வெளிநாட்டுக்காரனிட்டை இல்லை...அதைப் பழகிக்கொள்ளவேணும் நாங்களும்!"
-பரஞ்சோதி மளமளவென்று சொல்லிக்கொண்டே போனான்.
வார்த்தைகளில் கொஞ்சம் கடுமை தொனித்தது.
இன்றைக்கு நிறைய வித்தியாசம்தான் இவனில்.
புவனராணி அவனை இமைகொட்டாமல் பார்த்தபடி நின்றாள்.அவனை எதிர்த்துப்பேசத் தோன்றவில்லை.
என்ன பேசுவது?
"சரி...உனக்குப் பசிச்சால் சாப்பிட்டிட்டு வந்து படு...எனக்குப் பசிக்கேல்லை...!"
-அவன் தன்பாட்டில் சொல்லிக்கொண்டு அவளது பதிலுக்காகக் காத்திருக்காதவன் போல் படுக்கையறைக்குப் போய் உடைமாற்றிக்கொண்டு இரட்டைப் படுக்கையில் ஒரு ஓரமாகச் சரிந்து கொண்டான்.
அடுத்தசில வினாடிகளில் அவனிடமிருந்து மெல்லிதாகக் குறட்டைச்சத்தம் எழ ஆரம்பித்தது.
புவனராணிக்குப் பசித்தது. சாப்பிட மனம் இடம்தரவில்லை.
தூக்கம் வந்தது. தூங்குவதற்கு மனம் இடம்தரவில்லை.
இதுநாள்வரையில்லாத புதிய பயம் ஒன்று அவள்மனத்தை இப்போது ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது.
ஊரில் அமைதிகொள்ளவிடாமல் அடிக்கடி தாக்குதல் நடத்தும் ஆமிக்காரன்களாய் ஏதேதோ கெட்ட எண்ணங்கள் அவள் மனத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
அவன் மனத்தில் வேர் விடத்தொடங்கிய வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாய் இப்போது அவன்வார்த்தைகளில் தொனிக்கும் கடுமை அவளை நன்றாகவே தாக்கியிருந்தது.
விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தபின்னும் அவளது இமைகளை மூடிக்கொள்ளவிடாமல் தடுத்துநிற்கும் வேதனையோடு அவள் தன்னுள் போராடிக் கொண்டு கிடந்தாள்.
இல்லறம் என்னும் நல்லறம் தன்னில்இதயம் கலந்து உயிர்கள் இணைந்து ஈருடல் ஓருயிர் என்று மகிழ்ந்து......
இன்பமாய்த்தான் தொடங்கிற்று மணவாழ்வு. ஆனால் காலம்....அது எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது என்ற உண்மை அப்போது தெரியவில்லை.
இல்லற பந்தத்தில் இரண்டு உயிர்களை இணைத்துவைக்க முயலும் சமூகம் அவ்விருவரின் நல்ல தன்மைகளை மட்டுமே ஆராய்ந்து பார்க்கிறது.
ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணம் என்ற அர்த்தத்தில் இருவருடைய குறைபாடுகளையும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தாலிக் கயிற்றால் முடிச்சுப்போட்டுவிடுகிறது. நாளாக ஆக ஒருவர் குறை ஒருவருக்குத் தெரிய வர ஒன்றுபடவேண்டிய உள்ளங்கள் இரண்டுபட்டுப் போகின்றன. ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ள முடியாமல் ஒத்துப்போக முடியாமல் மனத்துக்குள் புகைந்துகொண்டு தமது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டவர்கள் அனேகம்.
அந்த வரிசையில் இப்போது புவனாவும் பரமும் வந்தாயிற்று.
ஒரு ஆணும் பெண்ணும் இணையும்போது தாங்கள்மட்டுமே உலகம் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது.தங்கள் உறவுக்குச் சாட்சியாய் ஒரு மழலைவேண்டும் என்று மனம் விருப்பம் கொள்ளும்போது இருக்கின்ற உறவில் ஒரு இடைவெளி வருகிறது.தங்கள் விருப்பத்துக்குத் தடையாய் இருக்கிற எல்லாவற்றையுமே அவர்கள் வெறுக்கத் தயாராகி விடுகிறார்கள். தங்கள் துணை உட்பட.
இத்தனை சீக்கிரமாக பரஞ்சோதியின் மனதில் ஒரு மாற்றம் ஏற்படக் கூடுமென்றோ தன்னையே வெறுத்து அவன் நடந்துகொள்ளக் கூடுமென்றோ புவனாவால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடிந்ததில்லை.ஆனால் நடந்துவரும் நிகழ்வுகள் அவனுள் உறங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு மனிதனைப் படம்பிடித்துக் காட்டியபோது அவள் திகைத்துப்போனாள். அவன் இதேபோக்கிலேயே போய்க்கொண்டிருப்பானானால் அவள் தனக்கென்றுள்ள ஒரு வாழ்க்கையை வெகுவிரைவாகவே இழந்தாக வேண்டியிருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதற்குப் பிறகு தொடரப் போகும் அவள் வாழ்வு?
பயம் அவள் நெஞ்சில் வேரோடிப் படர்ந்தது.
0
...............................................
ஒருமுதலாகிய முதுபொருளாய்
இருந்ததனங்களும் வம்பில் இழந்து
மதனசுகந்த விதனம்இது என்று
வாலிபகோலமும் வேறு பிரிந்து-
வளமையும் மாறி இளமையுமாறி
வன்பல் விழுந்துஇரு கண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிரோதகு ரோதம்அடைந்து-
செங்கையினில் ஓர் தடியும் ஆகியே-
வருவது போது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்திநடந்து
மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாய் அறியாமல் விடாமல்மொழிந்து.....
(பட்டினத்தார் பாடல்)
வீடு: 2
"இதோ ஊரையே அழித்துவிடுகிறேன் பார்!" என்கிறதுபோல, இருட்டிக் கொண்டு வந்து இடியும் மின்னலுமாய் பெரிதாய் அட்டகாசம் பண்ணி, புயற்காற்றோடு அங்குமிங்குமாய்த் திசைமாறி அடித்துப் பெய்த மழை, ஈரத்தை உள்வாங்கிக்கொண்டு ஏதுமறியாமல்கிடக்கிற நிலத்திடம் தன் ஆவேசத்தைக் காட்டமுடியாமல் எங்கோ ஓடி மறைந்திருந்தது.
மழைக்கு அஞ்சி ஒதுங்கியவர்களும் ஓடியவர்களும் வானத்தை அண்ணாந்து பார்த்து, "சே!" என்று சலித்து..."இந்தநாட்டிலை வெதரையும்(காலநிலை) நம்பேலாது... பொம்பிளையளையும் நம்பேலாதுஎண்டு சொல்கிறது சரியாத்தானிருக்கு!" என்று ஒட்டுமொத்தமாய்த் தத்துவம் பேசிக் கொள்கிறவர்களுக்குச் சாட்சியாய்-
மழையை இப்போது காணோம்!
வானம் வெளித்துச் சிரித்தது..
வெயில், நிலத்தில்வடிந்த ஈரத்தைத் துடைத்துச் சுத்தப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தது.
இந்த மழையைப்போலத்தான்-
அப்பாவின் கோபமும்.
எப்போது அவர் கொதித்துக் கொந்தளிப்பார் என்று சொல்லமுடியாது... ஆனால் வந்தவேகத்திலேயே அவரது சீற்றமும் சினமும் அம்மாவின்மீது முட்டி மோதி...ஈரத்தை உள்வாங்கும் நிலமாய் மௌனித்திருக்கும் அம்மாவின் சாந்தமான முகத்தின் முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே தணிந்து அல்லது மறைந்துபோகும்.
அம்மாவின் அருகில் வந்தமர்ந்து அவவின் தலையை மெல்லவருடி மௌ்ளப் புன்னகைத்து-"கோவிக்காதை...பிழை என்னிலையும் இருக்கலாம்!" என்று தான் இழைக்காத தவறானால்கூட அதுவும் தன்னுடையதே என்று ஒப்புக்கொண்டு அம்மாவின் முகத்தை மூடிக்கொண்டிருக்கிற துயர ரேகைகளை விரட்டி மறுபடியும் அவளது முகத்தில் மலர்ச்சியைக் கொண்டுவருவதில் அப்பா ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார்.
அப்பாவின்மீது கோபம் வரும் அருந்ததிக்கு. "ஒரு ஆம்பிளை இப்பிடிப் பயந்தாங்கொள்ளித்தனமாய் நடந்து கொள்ளலாமா?" என்று.
அதேநேரம் ஆச்சரியம்-"அப்பாவால் எப்படி இப்படித் தன் உணர்ச்சிகளை உடனுக்குடன் கட்டுப்படுத்தி சகஜநிலைக்கு மாறமுடிகிறது?"என்று.
இத்தனைக்கும் அப்பா ஒரு சாதாரணமனிதராக வாழப்பழகாதவர்.தானும் தன்பாடும் என்று இருப்பது அவருக்குப் பிடிக்காது.
"ஒவ்வொருத்தரும் தானும் தன்ரகுடும்பமும் எண்டுதானை வாழுகினம்... ஆனா உங்களாலை அது ஏலாது...ஊர்ச்சோலியளை எல்லாம் அள்ளித் தலையிலை போட்டுக் கொண்டு திரியிறீங்கள்...இதாலை ஒரு அஞ்சு சதத்துக்குப் பிரயோசனம் உண்டா?"
-எப்போதாவது அபூர்வமாக அம்மா வாயைத்திறந்தால் இப்படித்தான் அப்பாவைக் கிண்டிக் கிளறுகிறமாதிரிக் கேள்விகள் வரும்.
ஆனால் அப்பாவுக்கு அந்த நேரம் கோபம் வராது.
"நானும் என்ரைகுடும்பமும் எண்டு உருவாகிறதே பொது நலத்தாலைதானை? ..நீ ஆரோ ஒருத்தி... நான் ஆரோ ஒருத்தன் எண்டு இருந்திருந்தால் அன்புகாட்டி வாழத்தெரியாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பொதுநலத்துக்காக வாழ்கிற மனப்பான்மைதான் இந்த உலகத்தை வாழவைக்குது. அதை மறந்திராதை.!"
அப்பாவுக்கு அம்மாவால் பதில் சொல்லமுடியாது.
அவள் அவரைக் காதலித்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.முன்பின் அறிமுகமில்லாமல் திடீரென ஏற்பட்ட சந்திப்பு. முற்றவெளியில் நடந்த கலைவிழாவொன்றில் அவர்கள் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டார்கள். இருவரும் ஒருவரையொருவர் ஏற்கனவே சந்தித்தவர்களாய் உணர்ந்துகொண்டார்கள். பூர்வஜன்மபந்தம் என்று அதற்கு அர்த்தம் கொண்டார்கள். அவர்களைச் சந்திக்கவைத்து காதலில் சிக்கவைத்த காலம் அந்தக் காதல் அரைகுறையாக வாடிப்போகாமல் அவர்கள் கணவன் மனைவியாக இணையவும் வழிவகுத்தது.
மகள் அருந்ததிக்கே இப்போது வயது இருபத்திநான்கு.
குடும்பவாழ்வில் வெள்ளிவிழாவும் கண்டாயிற்று.
"காதல் என்பது சுயநலம் அல்ல...அது பொதுநலம்" என்பார் அப்பா.
"தான் நல்லாயிருக்க வேணும் எண்ட சுயநலத்திலைதான் காதலே பிறக்குது!" என்பாள் அம்மா.கருத்துக்கள் அங்கே முரண்பாடு காணும்.ஆனால் அதற்காய் அவர்கள் காதலை இழந்துவிடவில்லை.தாம்பத்தியத்தில் இருபத்தைந்து வருடங்களானாலும் இன்னும் இளமை மாறாத காதல்.
"ஒருத்தருக்காக ஒருத்தர் வாழவேணுமெண்டு நினைச்சால் அதுதான் உண்மைக் காதல்... தனக்காக தான்வாழவேணுமெண்டு நினைச்சால் அது காதலே அல்ல..!" அப்பா கடுமையாக வாதாடுவார்.
"என்ர சுகம்தான் உன்ரைசுகம் எண்டு வாழவந்தவள் நீ...உன்ரை சந்தோசம் தான் என்ரை சந்தோசம் எண்டு ஏற்றுக் கொண்டவன் நான்... இண்டைக்கு நீ உன்ரை சுகத்திலையே குறியாய் இருந்தால் அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..தனிவாழ்க்கையிலை உனக்காக நான் எதையும் விட்டுக்குடுக்கலாம். ஆனால் பொதுவாழ்க்கையிலை என்ரை கொள்கைகளை குணாதிசயங்களை உனக்காக நான் மாத்திக்கொள்ள முடியாது!"
-இன்றைக்குக் காலையில் எப்படியோ ஆரம்பித்த வாக்குவாதம் அப்பாவின் ஆவேசத்தைக் கூட்டியிருந்தது.
"உனக்காக நான் உயிரையும்தருவன் எண்டு சொல்லிப்போட்டு இண்டைக்கு ஊருக்காக என்னையே எடுத்தெறிஞ்சு கதைக்கிறீங்கள்!"
-அம்மா வாய்க்குள் முனகியது அப்பாவின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. வயதுகளைத் தொலைத்து, இளமையைத்தொலைத்து, அனுபவங்களை நிறைத்துக்கொண்டு ஆனாலும் சமூகத்தில் தனக்கென்றொரு பாதையை வகுத்துக்கொண்டிருக்கிற தன்னை அவள் இளக்காரப்படுத்துகிறாள் என்பதுபோல் தோன்றிற்று அவருக்கு.
"உனக்காக நான் உயிரையும் தருவன் எண்டு சொன்னது உண்மைதான். இப்பவும் அப்பிடித்தான் வாழந்துகொண்டிருக்கிறன். ஆனால் அதுக்காக என்ரை உயிரை நீயே பறிச்சுப்போடாதை.!" என்று அவர் சினந்தபோது அம்மாவின் கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் புரண்டது.
"என்ன அப்பா இது... அம்மா என்ன சொல்லிப்போட்டா எண்டு இப்பிடி அழவைக்கிறீங்கள்?" என்று தாய்க்காகப் பரிந்தபடி ஓடிவந்தாள் அருந்ததி.
"என்னவாவது சொல்லி ஒப்பாரிவைக்கிறதே கொம்மாவுக்கு இப்ப பழக்கமாப் போச்சுது!" என்று சொல்லிக்கொண்டே கதவைத்திறந்து வெளியே போனார் அப்பா.
"என்னம்மா?"
"எனக்குப் பயமாக் கிடக்கடி...!" அம்மாவின் குரல் தளதளத்தது.
"பயமா ஏன்?"
"இப்ப கொஞ்சநாளாவே உன்ரை அப்பாவின்ரை போக்குச் சரியில்லை.....!"
"ஏன்...என்னசெய்கிறார்?"
"அதை உனக்குச் சொல்ல ஏலாது...அதிலை ஒரு பிரயோசனமும் இல்லை!"
"சும்மா வீண்கவலைப்படுறியள்... அப்பாவைப்பற்றி எனக்கு நல்லாத்தெரியும்... நீங்கள் நினைக்கிறமாதிரி அவர் இல்லை...!"
"ஆனால் இந்தநாட்டுநிலமை அப்பிடி இல்லையேடி...எவ்வளவு திறமான ஆக்களையும் படுகுழியிலை கொண்டுபோய்த் தள்ளிப்போடும்...!"
"சும்மா விசர்க்கதை கதைக்காதீங்கோ அம்மா... எந்தநாடாயிருந்தால் என்ன நல்லவை எப்பவும் நல்லவைதான்... கூடாதவங்கள் எப்பவும் கூடாதவங்கள்தான்...!"
"நீ சொல்கிறை....ஆனா...!"
-அம்மா அதற்குமேல் எதுவும் பேசவில்லை.
மறுநாள் காலை.
திடீரென அலறிய தொலைபேசிச் சத்தத்தில் விழிப்புவந்தது அருந்ததிக்கு.
"ஹலோ...அருந்ததியா?"
எதிர்க்குரல் சட்டெனப் புரிந்துவிட்டது..
"அருந்ததிதான் கதைக்கிறன்...என்ன புவனராணி?"
"சண்முக அண்ணர் இருக்கிறாரா?"
"அப்பாவா? இல்லையே...வேலைக்குப் போயிருக்கிறார்...என்ன விசயம்?"
"அவசரமாய் அவரோடை கதைக்கவேணுமே!"
புவனராணி பதட்டப்படுவது தெரிந்தது.
"அப்பாவின்ரை வேலை இடத்து நம்பரைத் தாறன் கதைச்சுப்பார்."
"சொல்லு!"
புவனராணி தொலைபேசியை வைத்ததும் அம்மா அவசரமாக வந்தாள்.
"ஆரடி போன் எடுத்தது?"
"புவனராணி!"
"என்னவாம்?"
"அப்பாவோடை ஏதோ அவசரமாய்க் கதைக்கவேணுமாம்."
"அவரோடை என்ன கதைக்கவேணுமாம் இவள்?" என்று சற்றுச் சினத்துடன் கேட்ட அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் அருந்ததி.
"அவரோடை கதைக்கிறதை என்னட்டையும் சொல்லலாம்தானை?" அருந்ததிக்குச் சிரிப்புவந்தது.
"அம்மா..!புவனராணிக்கு என்ன பிரச்சினையோ...அப்பாவிட்டை ஏதாவதுஉதவி கேட்க எடுத்திருப்பா... அப்பாவோடை கதைக்கிறதை எங்களிட்டைச்சொல்லு எண்டு கேட்கிறது நல்லதே... அவ சொன்னாலும் எங்களாலை தீர்க்க முடியாத பிரச்சினையாக்கூட இருக்கலாம்தானை!"
"உனக்கு உலகம் விளங்காது விடு!" என்று சலித்துக்கொண்டே மறுபடி தன்னுடைய அறைக்குப் போனாள் அம்மா.
0
..........................
துயில்வரும்நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சும்உ லர்ந்து வரண்டு
துகிலும் இழந்து சுணையும்அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு
கலியுகம் மீதில் இவர் மரியாதை
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து
தெளிவும்இராமல் உரைதடுமாறி
சிந்தையும் நெஞ்சமு லைந்து மருண்டு
திடமும்அலைந்து மிகவும்அலைந்து
தேறிநல்லாதரவு ஏதுஎன நொந்து
மறையவன்வேதன் எழுதியவாறு
வந்ததுகண்டமும் என்று தெளிந்து
இனியென கண்டம் இனியென தொந்தம்
மேதினிவாழ்வுநி லாதினிநின்ற
கடன்முறைபேசும் எனவுரை நா
றங்கிவிழுந்து கை கொண்டுமொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலுசு வாசமும் நின்று
........................................................
வீடு-3
"பாவம்....புவனராணி. இந்தச் சின்ன வயசிலை அவளுக்கு இப்பிடியொரு விதி!"
"ஆராருக்கு என்ன நடக்கவேணுமோ அதுதானை நடக்கும்!"
"எண்டாலும்..பாவம்....அவள் எப்பிடித்தான் தாங்கிக்கொள்ளப் போறாளோ...!"
"சொந்தபந்தமெண்டும் ஆரும் இல்லை...சரி... ஒரு பிள்ளையாவது பிறந்திருந்தால் அதை நினைச்சாவது ஆறுதல் அடைஞ்சிருப்பாள்...!"
"ம்...நாங்கள் பாவம் பாத்தென்ன...செத்தவன் செத்ததுதான்...!"
-புவனராணியின் அயலில் இருந்தவர்களுக்கு இப்போது அவளில் அனுதாபம் பிறந்திருந்தது...
பரஞ்சோதியின் கதை இப்படிப் பாதியில் முடியுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான்.
மரணம் யாருக்கும் திகதி குறித்துவிட்டு வருவதில்லை.எந்தநிலையில் இருந்தாலும் எப்படி இருந்தாலும் காலம் தன் கணக்கைமாற்றி எழுதுவதில்லை.
பரஞ்சோதியின் விடயத்திலும் அதுதான் நடந்தது. நேற்றுமாலை நெஞ்சுவலி என்று வந்து படுத்தவன் இரவு அம்புலன்ஸ்வந்து ஏற்றியபோது உயிர் பிரிந்திருந்தது.
எல்லாரையும் விட அதிகமாய்த் துடித்துப் போனவர் சண்முகம்தான். பரஞ்சோதிக்கும் அவருக்கும் இடையில் பதினைந்துவருடப் பாசம்.
அவர் ஜெர்மனிக்கு வந்தபுதிதில் அகதிக்காம்பில் பதினெட்டு வயதுப் பையனாக அவனைக் கண்டார் அவர். அது என்னவோ இவர்மீது அவனுக்கு அப்படியொரு பிடித்தம். "அண்ணை அண்ணை!" என்று இவரையே சுற்றிச்சுற்றி வருவான். சில காலங்களுக்கு இவர் வீட்டிலேயே அவனும் தங்கியிருந்தான். விசாப் பிரச்சினைகள் தீர்ந்து வேலையும் கிடைத்தபிறகு தனியாக வீடு எடுத்துக்கொண்டு போய்விட்டான். ஆனாலும் சண்முகத்தின்மீது அவனுக்குள்ள அன்பு குறைந்ததாகக்கொள்ளமுடியாது.
அவனுக்கும் புவனராணிக்கும் திருமணம் நடந்தபோது அவனது தந்தையின் இடத்திலிருந்து திருமணப்பதிவுக்கு சாட்சிக் கையெழுத்துப்போட்டவரும்m சண்முகம்தான். தான் முன்னின்று நடத்திய திருமணம் இப்படிஅரைகுறையாக முற்றுப்பெற்றுவிட்டதில் சண்முகத்துக்கு தாளாத வேதனை.
பரஞ்சோதியின் மறைவிலும் மேலாக புவனராணியின் நிலையே அவரை இன்னும் பாதித்தது. அவளுக்கென்று இங்கு உற்றார் உறவினர் யாருமில்லை.பழகியவர்களிலும் உண்மையான பாசத்தோடு அவளிடம் பழகியவர்கள் மிகக்குறைவாகவே இருந்தார்கள்.மற்றவர்களுடன் அதிகம் பழக்கம் வைத்துக்கொள்ள விரும்பாத பரஞ்சோதியின்போக்கும் அதற்கொரு காரணமாக இருந்தது.
இனி....?
என்னதான் வெளிநாட்டு வாழ்க்கையில் மற்றவர்களைப்பற்றி அக்கறைப்படாமல் தாங்களும் தங்கள்பாடும் என்று வெள்ளைக்காரன்மாதிரி வாழ்ந்துவிடலாம் என்று வாழமுனைந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இனசனம் என்று தேடி ஓட வைத்துவிடுகிறது காலம்.அதிலும் தனிமைவாழ்வில் வெள்ளைக்காரன்மாதிரி வாழ்வது அத்தனை சாத்தியமான காரியமல்ல என்பது அப்படி வாழ்ந்து அனுபவப்பட்டவர்களுக்குத்தான் புரியும்.
தாங்களும் தங்கள்பாடும் என்று ஆரம்பித்து தங்கள் குடும்பப் பிரச்சினைகளிலிருந்து மீளமுடியாமல் மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளமுடியாமல் மனம் புழுங்கி மனநோய்வைத்தியசாலையைத் தஞ்சம் புகுந்தவர்கள் பலரை சண்முகம் அறிந்திருந்தார்.
அப்படி ஒரு நிலை புவனராணிக்கு ஏற்பட்டுவிட்டால்....
அச்சம் அவருள் குடிகொண்டது.
வீட்டிலும் வேலைத்தலத்திலும் புவனராணியின் நினைவும் நிலையும்அவரது மனத்தை முற்று முழுதாய் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
அவளுக்கு ஏதாவது வழிசெய்தாகவேண்டும்.
முன்பொருநாள் பரஞ்சோதி அவரிடம் கேட்டது சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது.
"அண்ணை...சாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?"
"என்னடாப்பா...திடீரெண்டு! வாழும்வளரும் பிள்ளையள் சாவைப்பற்றி இப்ப நினைக்கப்படாது!"
"ஆனால் பிறந்தவை எல்லாரும் சாவைத் தங்களோடை கொண்டுதானை திரியினம்!"
"மெய்தான். அதுக்காக அதைப்பற்றியே நினைச்சுக்கொண்டிருக்கவேணும் எண்டில்லையே"
"அதுக்கில்லை அண்ணை நான் கேட்டது....சாவுக்குப் பின்னாலை என்ன இருக்கும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?"
"வாழ்க்கைதான்!"
"என்னண்ணை...செத்தவன் எப்பிடி வாழ்கிறது?"
"இப்ப நாங்கள் ஆர்? முந்தி வாழ்ந்தவங்களின்ரை ஒரு பகுதி. என்ன? இனிவாற சந்ததி எங்களின்ரை பகுதி...இப்ப உதாரணத்துக்கு நீ உன்ரை தாய்தகப்பன்ரை எச்சம்.உன்ரை பிள்ளையள் உன்ரை வாழ்க்கையின்ரை எச்சம்...இப்ப உன்னிலை உன்ரை தாய்தகப்பன்ரை ரெத்தம் ஓடுறதுமாதிரி...உன்ரை பிள்ளையளிலை உன்ரை ரெத்தம் ஓடும். என்ன...அப்ப நீ செத்தாலும் உன்ரை பிள்ளையளின்ரை உருவத்திலை நீவாழ்கிறதாத்தானே அர்த்தம்...!"
"சும்மா போட்டுக் குழப்பிறியள்" என்று சிரித்தான் பரஞ்சோதி. ஆனாலும் அவனது கண்களில் ஒருகலக்கம் தெரிந்ததை அவதானித்தார் அவர்.
"என்னடாப்பா....நீ எதையோ நினைச்சுக் குழம்பிறை...என்ன சங்கதி...? என்னட்டைச் சொல்லுறதாயிருந்தால் சொல்லு!"
"உங்களுக்குச் சொல்லாமல் வேறை ஆரட்டை அண்ணை சொல்லுவன்...என்ரை வாழ்க்கை என்னோடை முடிஞ்சிடும்போலக் கிடக்குது!...என்னதான் உழைச்சென்ன... பேர் சொல்ல ஒரு பிள்ளை பிறக்காமல்..."
சண்முகம் சிரித்தார்.
"இதுக்கேனடாப்பா இவ்வளவு கவலைப்படுகிறை...இப்ப ஏன் அவசரப்படுகிறை....கொஞ்சம் பொறுத்துப் பிறக்கட்டுமன்"
"கலியாணம்கட்டி அஞ்சுவருசம் ஆச்சுது அண்ணை... அதைவிட இன்னொரு விசயம்....இனி எனக்குப் பிள்ளை பிறக்க சந்தர்ப்பமே இல்லையெண்டு டொக்டர் சொல்லிப்போட்டார்!"
அதைச்சொன்னபோது அவனது கண்கள் கலங்கியிருந்தன.
தலையைக் குனிந்துகொண்டான்.அவனுக்கு ஆறுதல் சொல்ல வழிதெரியாமல் வானத்தைப் பார்த்தார் சண்முகம்.
"நான் எனக்காகக் கவலைப்படேல்லை அண்ணை...பாவம் இவள் புவனா!"
"சரி... இதையே நினைச்சுக் கவலைப்படாதை...வாழ்க்கையிலை எவ்வளவோ காரியங்கள் இருக்கு....!சில துன்பங்கள் வாறபோது அதுக்கு மாற்றுவழியாகவும் சில காரியங்களை நாங்கள் செய்யலாம்...நான் என்ரை மனிசி என்ரை பிள்ளையள் எண்டு ஒரு குறுகின வட்டத்துக்குள்ளை நிக்காமல் என்ரை இனம் என்ரை சனம் எண்டு கொஞ்சம் பார்வையை விரிச்சுப்பார். உனக்கு ஒரு பிள்ளை பிறக்கேல்லையே எண்டு கவலைப்படுகிறபோது எங்கடை நாட்டிலை எத்தினையோ பிள்ளையள் தாய்தகப்பனை இழந்து நிக்குதுகளே... அதைக் கொஞ்சம் நினைச்சுப்பார்...அந்தப் பிள்ளையளுக்கு ஏதாவது செய்ய முடிஞ்சால் அது எத்தனை பெரிய புண்ணியம்!"
சண்முகம் அதைச் சொல்லி முடித்துவிட்டு அவனைப் பார்த்தபோது அவன் தன்கண்களைத் துடைத்துக்கொண்டான்.அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தாற்போல் தோன்றிற்று.
அடுத்தடுத்த மாதங்களில் அவன் தன் போக்கை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருந்தான் என்பதைப் புவனராணியின் கதைகளிலிருந்து ஊகித்துக் கொண்டார் சண்முகம்.
ஆனால் காலம் அவனை இப்படி அற்பாயுளில் கவர்ந்துகொண்டு போகுமென்று யார் எதிர்பார்த்தார்கள்?
0
...........................
வளர்பிறைபோல எயிறும் உரோம
மும்சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலைபோல்யம தூதர்கள் வந்து
வலைகொடுவீசி யுயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில்விழுந்து மனைவி புலம்ப
மாள்கினரேயிவர் காலம் அறிந்து
பழையவர் காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட நின்றவர் பந்தர்
இடுமெனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று
பலரையும் ஏவி முதியவர் தாம்
இருந்தசலம் கழுவுஞ்சிலர் என்று
பணிதுகில் தொங்கல் களபம் அணிந்து
பாவமே செய்து நாறும் உடம்பை
வரிசைகெடாமல் எடும் எனவோடி
வந்துஇள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகிநடந்து சுடலைடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடைமூடி அழல்கொடு போட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகியெலும்பு கருகிடயங்கி
ஓர்பிடிநீறும்இ லாத உடம்பை
நம்பும் அடியேனை இனியாளுமெ!
(பட்டினத்தார் பாடல்)
வீடு: 4
அருந்ததிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இப்படியொரு நிலை ஏற்படும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் அது ஒரு சின்னச் சண்டையாக உருப்பெறுவதும் யாராவது ஒருவர் அதில் விட்டுக்கொடுத்து மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்புவதும்...எல்லாம் சாதாரணம்தான்.
ஆனால் இப்போது...
ஒரு சிறு விவாதம் பெரும்புயலாக மாறி அப்பா என்ற ஆலமரத்தையே அடியோடு சாய்க்கிறமாதிரி...
அப்பா கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டே வெளியேறிவிட்டார்.
இரண்டு நாட்களாக அவர் வீட்டுப் பக்கமே வரவில்லை.வேலைத் தலத்திலும் இல்லை.வேறு எங்கே போயிருப்பார் என்பது புதிர்.
"எங்கைபோவார்...அந்தப் புவனராணி வீட்டைதான்!" என்ற அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் அருந்ததி.
"சீ...இப்பிடியெல்லாம் கதைக்காதீங்கோ அம்மா...இது பாவம்!"
"எதடி பாவம்..? வயசுபோகப்போக மனிசருக்குப் புத்தி மாறும் எண்டது இப்பதான் எனக்கு விளங்குது...கொப்பனுக்குப் புத்தி மளுங்கிட்டுது!...."
அம்மாவின் நிலையைப் பார்க்க அம்மாவுக்குத்தான் இப்போது புத்தி மழுங்கிவிட்டது என்று தோன்றிற்று அருந்ததிக்கு.
"நீங்கள் ரெண்டுபேரும் இப்பிடி மாறிமாறிச் சண்டைபிடிச்சுக்கொண்டிருந்தால் பழுதாப்போறது உங்கடைவாழ்க்கை இல்லை அம்மா...என்ரை வாழ்க்கைதான். ஒரே ஒரு பிள்ளை எண்டு இருக்கிற என்னைப்பற்றிக் கொஞ்சமாவது யோசிக்கிறீங்களா நீங்க? நீங்கள் என்ன சொன்னாலும் சகிச்சுக்கொண்டிருக்கிற அப்பா இப்ப ரெண்டு நாளா வீட்டையே வராமல் இருக்கிறேர் எண்டால்.... அவரின்ரை மனம் எவ்வளவு புண்பட்டுப் போயிருக்கும் எண்டதைப்பற்றிக் கொஞ்சமாவது யோசிச்சீங்களா நீங்க?"
"முந்தி எண்டால் கொப்பனுக்குப் போக்கிடம் இல்லை...இப்ப இருக்குது... அதுதான் போயிற்றேர்!"
அம்மாவின் பேச்சு அருந்ததிக்கு சினத்தை மூட்டிற்று.இனி அம்மாவை எதிர்த்துக் கதைப்பதில் அர்த்தமில்லை என்றுணர்ந்தாள் அவள்.
எதுவும் பேசாமல் தனது அறைக்குள் போய் கதவைச சாத்திக்கொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் அப்பாவின் குரல் கேட்டது.
"அருந்ததி"
அவள் அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.
அப்பாவும் அவருக்குப்பின்னால் புவனராணியும்!
அம்மா கண்ணில் படவில்லை. மற்றொரு அறைக்குள் போய் அம்மா மறைந்துகொண்டிருக்கிறாள் என்று அருந்ததிக்குப் புரிந்தது. அப்பாவுக்கும் புரிந்திருக்கும்.
"அம்மா எங்கை...?" என்று சுற்றுமுற்றும் பார்த்தபடி விசாரித்தாள் புவனராணி.
"என்ன விசயம்?" கேட்ட அருந்ததியின் குரலில் கொஞ்சம் கடுமை தொனித்தது.
புவனராணி அதைப் புரிந்துகொண்டாளோ என்னவோ...களையிழந்திருந்த அவளது முகத்தில ஒரு விரக்திப் புன்னகை படர்ந்தது.
"இண்டைக்கு நான் வெளிக்கிடுறன்...அதைச்சொல்லிப்போட்டுப் போவமெண்டு!"
"எங்கை?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள் அருந்ததி.
"ஊருக்கு!" என்றாள் புவனராணி.
"அங்கையா...?அங்கைபோய்...?"
"இங்கையிருந்தும் என்ன செய்யப்போறன்? இந்த அந்நிய தேசத்திலை சொந்த நாட்டாரே வெளிநாட்டுக்காரர்மாதிரி... இதைவிட அங்கைபோய் அயலட்டத்தோடை சேர்ந்து கஞ்சி குடிச்சாலும் நிம்மதியிருக்கும்..."
புவனராணி அதைத் தளதளத்த குரலில் சொன்னாலும் அதில் ஒரு உறுதியிருந்தது.
"இப்ப கொஞ்சநாளாய் அப்பாவுக்குத்தான் சரியாக் கரைச்சலைக் குடுத்திட்டன்...என்ரை பயண ஒழுங்குகளுக்கெல்லாம் அப்பாவைத்தான் கூட்டிக் கொண்டு திரிஞ்சனான்..."
அருந்ததிக்குப் புரிந்தது.
"ஏழுமணிக்கு பிளைற்...அப்பாவோடை நீயும் அம்மாவும் வந்து என்னை பிளைற் ஏத்திப்போட்டு வாங்கோவன்..."
"இரு புவனா....வாறன்....!"
அருந்ததியும் புறப்பட ஆயத்தமானாள்.
அறைக்குள்ளிருந்து அழுதுகொண்டிருந்த மனைவியைச் சமாதானப்படுத்த உள்ளே போனார் சண்முகம்.
"இதோ ஊரையே அழித்துவிடுகிறேன் பார்!" என்கிறதுபோல, இருட்டிக் கொண்டு வந்து இடியும் மின்னலுமாய் பெரிதாய் அட்டகாசம் பண்ணி, புயற்காற்றோடு அங்குமிங்குமாய்த் திசைமாறி அடித்துப் பெய்த மழை, ஈரத்தை உள்வாங்கிக்கொண்டு ஏதுமறியாமல் கிடக்கிற நிலத்திடம் தன் ஆவேசத்தைக் காட்டமுடியாமல் எங்கோ ஓடி மறைந்திருந்தது.
000
(பிரசுரம்: பூவரசு 1997)









